ஈப்போ, டிச 17 – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா ஈப்போவில் எழுச்சியுடன் கலாச்சார மண்டபத்தில் ஆசிரியர் மணி இரா. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி முழங்கினார் . அந்த உணர்வை தொடர்ந்து நிலைநாட்டுவரும் திருவண்ணாமலை சாய் ரவிச்சந்திர சுவாமிகள் நல்லாசியுடன் இந்த விழா சிறப்புடன் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி ரகுராமின் இசை படைப்புடன் தொடங்கிய இந்த நிகழ்வில் பாரதியார் நினைவலைகள், ஆடல் பாடல், நாதஸ்வர, தவில் இசையுடன் சிறப்பு சொற்பொழிவும் இந்த நிகழ்சிக்கு மகுடம் சேர்த்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் இரா.மாணிக்கம் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பெ.விவேகனந்தா தலைமையுரையும் முன்னாள் தலைமை காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகத்தின் பேருரையும் இடம் பெற்றது.
பாரதியார் தமிழுக்கும், இந்திய நாட்டின் சுதந்திர எழுச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கு குறித்து தெய்வீகன் சுவைபட உரையாற்றினார். இந்த நிகழ்வில் பெரியவர் அமுசு .ஏகாம்பரம், பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ். புலிகேசி, வரத்தக பிரமுகர் கோவிந்தராஜ், உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் நித்திய ஜோதி நடனப் பள்ளி மாணவிகளின் நாட்டிய படைப்பும் இடம் பெற்றது.