Latestமலேசியா

ஈப்போவில், போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு நூறு ரிங்கிட் கொடுத்த பிரிட்டிஷ் தம்பதி; போலீஸ் தேடுகிறது

ஈப்போ, ஜனவரி 29 – போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், தாம் வெளியிட்ட “சம்மனுக்கு” தள்ளுபடி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு, பிரிட்டிஷ் தம்பதியை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

அந்த தம்பதி அண்டை நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறியுள்ளார்.

அதோடு, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியுடன், அச்சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் நேரத்தையும் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக, யுஸ்ரி சொன்னார்.

அச்சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சமூக ஊடக பிரபலங்களான அந்த பிரிட்டிஷ் தம்பதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 384-வது பிரிவின் கீழும், ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

அந்த தம்பதி தங்களின், “TREAD the globe” எனும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததால் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், குற்றப்பதிவை வெளியிடுகிறார்.

எனினும் பின்னர் 300 ரிங்கிட் அபராதத்திற்கு பதிலாக தமக்கு 100 ரிங்கிட் கொடுத்தால், அந்த அபராத பதிவை இரத்துச் செய்துவிடுவதாக அவர் கூறும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

முதலில் தங்களுக்கு குழப்பமாக இருப்பதாக கூறும் அந்த தம்பதி, பின்னர் நீதிமன்றத்திற்கு போவதை காட்டிலும், நூறு ரிங்கிட்டை செலுத்துவது மேல் என கூறி பணத்தை கொடுக்கும் காட்சிகளையும் அதில் காண முடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!