ஈப்போ , பிப் 14 – பேரா மாநிலத்தில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் இந்த ஆண்டு 569, 261 ரிங்கிட் நிதி வசூலானதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா இன்று தெரிவித்தது. பல்வேறு சரச்சையில் இருந்து மீண்ட ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் தைப்பூச விழாவை நடத்தி முடித்தது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மூலம் 130,400 ரிங்கிட் வசூலானதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் சீத்தாராமன் தெரிவித்தார். முடி காணிக்கை , பாலபிஷேகம், தேங்காய் அர்ச்சனை வழி அதிகமான நிதி வசூலானதாக அவர் தெரிவித்தார். இன்று காலையில் பேரா மாநில அரசாங்க செயலகத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனை ஈப்போ இந்து தேவஸ்தான சபா நிர்வாக உறுப்பினர்கள் சந்தித்தனர். அதன் பின் சிவநேசன் முன்னிலையில் தைப்பூச கணக்கு விவரங்களை சீத்தாராமன் வெளியிட்டார்.
இதனிடையே ஆலய நிர்வாகங்கள் சிறந்த முறையில் நிர்வாகத்தை வழி நடத்த வேண்டும் என சிவநேசன் ஆலோசனை தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மாநில நிலையிலான பொங்கல் விழா பேரா, சுங்கையில் உள்ள நகராண்மைக் கழக மண்டபத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என்று சிவநேசன் கூறினார். புறப்போக்கு நிலத்தில் வசித்து வரும் இந்திய குடும்பங்களுங்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்வாகவும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். அதோடு ஈப்போ கல்லுமலை தைப்பூச விழாவில் தொண்டூழிய சேவை வழங்கியவர்களுக்கு 20 ,000 ரிங்கிட், பூசிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு 10,000 ரிங்கிட் நிதி மற்றும் ஈப்போ பெரிய மருத்துவமனை ஊழியர் சமுக நல அமைப்புக்கு 10,000 ரிங்கிட் நிதியையும் அவர் வழங்கினார்.