போகோதா, டிசம்பர் 11 – உயரமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், கொலம்பியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவர், காயத்தையும், வலியையும் பொருட்படுத்தாது, மூட்டு நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ஆச்சரியம் என்னவென்றால், ஐந்து முதல் பத்து செண்டிமீட்டர் வரையில் ஒருவரது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் அந்த சிக்கலான, அறுவை சிகிச்சைகாக 29 வயது யெஃபெர்சன் கோசியோ எனும் அந்நபர், ஏறக்குறைய பத்து லட்சம் ரிங்கிட்டை செலவிட்டது தான்.
“வெறும் 10.16 செண்டிமீட்டர் கூடுதல் உயரத்திற்காக, உலகிலேயே வலி நிறைந்த சிக்கலான அறுவை சிகிச்சையை நான் செய்து கொண்டுள்ளேன்” என யெஃபெர்சன் பெருமையாக கூறியுள்ளார்.
விபத்தில் சேதமடைந்த உடல் உறுப்புகளை சரிசெய்ய மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சையை கையாள்வது வழக்கமாகும்.
இந்நிலையில், அந்த அறுவை சிகிச்சை தொடர்பான காணொளியை, இன்ஸ்டாகிராமில், தனது ஒரு கோடிக்கும் அதிகமான இரசிகர்களுக்காக யெஃபெர்சன் பதிவிட்டுள்ளார்.
உலகிலேயே அதிக விலையான அந்த அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டதன் வாயிலாக, 1.77 மீட்டர் உயரமிருந்த யெஃபெர்சன் தற்போது 1.83 மீட்டராக தனது உயரத்தை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
யெஃபெர்சன்னின் அந்த பதிவை இதுவரை மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; கலவையான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக, “உங்கள் மூளையை வளரச் செய்யும் அறுவை சிகிச்சையை எப்பொழுது மேற்கொள்ளப் போகிறீர்கள்” எனவும், “எவ்வாறு செலவளிப்பது என தெரியாத அளவுக்கு பணம் இருந்தால் இப்படி தான்” எனவும் சிலர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.