உலகக் கோப்பை 2026: ஈரான் ரசிகர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீடு ரத்து? அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு

ஈரான், ஜூன்-10- உலகக் கோப்பை 2026 காற்பந்து போட்டிக்கான ஈரான் ரசிகர்களின் டிக்கெட் ஒதுக்கீட்டை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஈரான் காற்பந்து கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
FIFA விதிகளின்படி, போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த அணியின் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளில் 8 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில், நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஈரான் ஏற்கனவே தொடங்கியிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் அந்த டிக்கெட் ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டதால், ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஈரான் காற்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் நியாயத்தன்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு முரணானது எனக் கூறியுள்ள ஈரான், ரசிகர்கள் போட்டிகளை நேரில் காணும் உரிமையை உறுதி செய்ய FIFA மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஈரான் பிரதிநிதிகள் சிலருக்கு அமெரிக்கா நுழைவு விசா வழங்கப்படாததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2026-இல் ஈரான் அணி ஜூன் 15-ஆம் தேதி நியூசிலாந்தையும், ஜூன் 21-ஆம் தேதி பெல்ஜியத்தையும், ஜூன் 26-ஆம் தேதி எகிப்தையும் எதிர்கொள்ளவுள்ளது.



