
பெசுட், ஜூன் 10 – இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியதில், 16 வயது இளைஞன் கடுமையாக காயம் அடைந்தான்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை சுமார் 5 மணியளவில், பெசுட் அருகே ஜாலான் ஜெர்தே–பாசிர் அகார் சாலையில் நிகழ்ந்தது. பெசுட் மருத்துவமனைக்கு இரண்டு நோயாளிகளை
ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் உட்பட மூன்று வாகனங்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டன.
அந்த ஆம்புலன்ஸ், முன்னதாக மற்றொரு விபத்தில் சிக்கியிருந்த இரண்டு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு பாசிர் அகாரிலிருந்து வந்து கொண்டிருந்ததாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரோஷய்மி அப் ரஹிம் ( Rozaime Ab Rahim ) தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, MPV வாகனம் ஒன்று சாலையின் வலது ஓரத்தில் இருந்து குறுக்கே வந்து, ஆம்புலன்ஸ் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
இதனால் , ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற ஓரத்தில் கவிழ்ந்து சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதிதால் அந்த வாகனம் ஒரு கால்வாயில் விழுந்தது.
ஆம்புலன்ஸில் இருந்த 16 வயது இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு , மற்றொரு நோயாளிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



