கலிபோர்னியா, பிப்ரவரி 12 – அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தை, அண்மையில் தாக்கிய புயல் மழையைத் தொடர்ந்து, அங்குள்ள உலகின் அதீத வெப்பமான ‘டெத் வேலி’ பாலைவனத்தில் அதிசயிக்கும் வகையில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட்டு மாதம் ஹிலாரி சூறாவளியால், டெத் வேலி தேசியப் பூங்கா அமைந்திருக்கும் பாலைவனப் பகுதியில், அடை மழை பெய்த வேளை ; திடீர் வெள்ளமும் ஏற்பட்டது.
அதனால் தோன்றிய, 11.3 கீலோமீட்டர் நீளமும், 6.4 கிலோமீட்டர் அகலமும், 0.6 மீட்டர் ஆழமும் கொண்ட அந்த ஏரி தோன்றிய இரு மாதங்களுக்கு பின்னர், கடந்தாண்டு அக்டோபரில் மறைந்துவிடும் என அதிகாரிகள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர்.
எனினும், தற்போது ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் அது வற்றாமல் வறண்டு போகாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெத் வேலி பாலைவனப் பகுதியில், ஆண்டுக்கு சராசரியாக 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்வது வழக்கமாகும். எனினும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அங்கு 127 மில்லிமீட்டர் வரை மழை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட்டில், அந்த பாலைவனப் பகுதியில் பெய்த வரலாறு காணாத புயல் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அங்குள்ள கட்டடங்களும், அடிப்படை வசதிகளும் சேதமுற்றன என்பது குறிப்பிடத்தக்கது.