
காஜாங், மே-25-சிலாங்கூர், உலு லங்காட்டில் சாலையோரமாக போலீஸாரை மோத முயன்ற 2 பெண்கள் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 9 மணிகு மேல் தம்பின் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார், டூசுன் துவா பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, அம்மூவரும் தங்களது காரைக் கொண்டு போலீஸ் அதிகாரிகள் மீது மிக ஆக்ரோஷமாக மோத முயன்றனர்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என்றாலும், காரில் தப்பியோட முயன்ற மூவரையும் போலீஸார் வெற்றிகரமாகக் கைதுச் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரில் போலி பதிவு எண் பொருத்தப்பட்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மூவரும் போதைப்பொருள் மற்றும் பல்வேறு கடுமையான குற்றப் பின்னணிகளைக் கொண்ட பழைய குற்றவாளிகள் என காஜாங் போலீஸ் தலைவர் ACP நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
கொலை முயற்சி பிரிவின் கீழ் இச்சம்பவம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



