கோலாலம்பூர், மார்ச் 1 – தமக்கு எதிரான, 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தெளிவாக இருப்பதாக கூறி, அவை மேல் நடவடிக்கைக்காக மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, பெர்சத்து தலைவர், டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூட்டரசு நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவருக்கு எதிரான அந்த தீர்ப்பை கடந்த மாதம் 28-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
அதனை எதிர்த்து முஹிடின் நேற்று கூட்டரசு நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்தாண்டு, ஆகஸ்ட்டு 15-ஆம் தேதி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பெர்சத்து கட்சிக்கு 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட் பணத்தை வழங்கிய நான்கு கையூட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து, முஹிடினை, உயர் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்தது.
எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த மனுவை செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிபதிகள் குழு, முஹிடினை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு, சட்ட அடிப்படையில் தவறானது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.