சித்தியவான், டிச 3 – எலி சிறுநீர் துர்நாற்றத்தால் மூடும் ஆபாயத்தை எதிர்நோக்கியிருந்த பேரா மஞ்சோங் மாவட்டத்தில் ஆயர் தாவார் நகருக்கு அருகில் உள்ள கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு இரண்டு் ஏக்கர் நிலம் பெறப்பட்டதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார். இப்பள்ளியை சுற்றி செம்பனை மரங்கள் இருந்ததால் எலிகளை ஒழிக்க முடியாமல் பள்ளி நிர்வாகம் சிரமப்பட்டு வந்தது. சுகாதார இலாகா மேற்கொண்ட சோதனையில் அப்பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் கல்வியை மேற்கொள்ள பொருத்தமான சூழ்நிலையில் இல்லை என்று கடிதமும் வழங்கியிருந்தது. இந்த நிலையில் கொலம்பியா தமிழ்ப் பள்ளிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திடீர் வருகை புரிந்ததாகவும், அப்போது இப்பள்ளிக்கூடம் எதிர் நோக்கிய பிரச்சனைகள் கண்டறிந்ததாக சிவநேசன் கூறினார்.
இப்பள்ளிக்கு மாற்று இடத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பயனாக இப்பள்ளிக்கூடத்திற்கு அருகேயுள்ள உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டதாக சிவநேசன் விளக்கம் அளித்தார். பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்திற்கு அப்பள்ளிக்கூடம் 13 லட்சம் வெள்ளி பிரிமியம் வழங்கவேண்டும் என்று நிபந்தனையையும் விதித்தது. இந்த விவகாரமும் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மாநில அரசாங்கத்திடம் பேச்சு நடத்தி அந்த தொகையை தள்ளுபடி செய்ததாக கம்போங் கொலம்பியா தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி அரங்குத் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட பின்னர் சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டிடத்தை எழுப்ப தொடர் நடவடிக்கை எடுக்க அடுத்த மாதம் இப்பள்ளிக்கு துணை கல்வி அமைச்சர் வருகை புரியவிருக்கும் தகவலையும் அவர் தெரிவித்தார்.