கோலாலம்பூர், ஜனவரி 31 – திருமண திட்டமிடல் சேவையை வழங்குவதாக கூறி மணப்பெண் ஒருவரை ஏமாற்றிய திருமண “பூட்டிக்” உரிமையாளருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனையும், ஒரு பிரம்படியும் விதித்து கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
31 வயது ஹஸ்மெருன் ஹாஷிம் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு, அவ்வாடவனுக்கு எதிராக சிறைத் தண்டனை இன்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும் மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
திருமண திட்டமிடும் சேவைகளை வழங்கியதாக கூறி, 29 வயது பெண் ஒருவரிடனிருந்து அவ்வாடவன் இரு தவணையாக ஒன்பதாயிரம் ரிங்கிட் பணத்தை ஏமாற்றியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
கடந்தாண்டு, ஆகஸ்ட்டு மாதம் 23 மற்றும் 25-ஆம் தேதிகளில், தலைநகர், செராஸ், தாமான் ஷாமெலின் பெர்காசாவிலுள்ள, குடியிருப்புப் பகுதியில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.