கோலாலம்பூர், டிசம்பர் 13 – கடந்த அக்டோபரில் இருந்து நிலுவையில் இருக்கும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் “மைகிட்” அடையாள அட்டைகளை, JPN – தேசிய பதிவுத் துறை அச்சிட்டு வருகிறது.
அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், அந்த அட்டைகள் கட்டங் கட்டமாக விண்ணப்பதாரர்களிடம் வழங்கப்படும்.
அதனால், மைகிட் அட்டைகளை பெறுவதற்கு முன், பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு பிள்ளைகளின் பிறப்புப் பத்திரத்தை பயன்படுத்தலாம் என, உள்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்சூல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
பிறப்புப் பத்திரம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணமாகும். அதனால், மைகிட் அட்டைகளை வெளியிடுவதற்கு முன், பிறப்புச் சான்றிதழ் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கம் மற்றும் தனியார் துறைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், நிலுவையில் இருக்கும் மைகிட் அட்டைகளை விரைந்து விநியோகிக்கும் கடப்பாட்டையும் அரசாங்கம் கொண்டுள்ளது எனவும் நசாரா குறிப்பிட்டார்.