கோலாலம்பூர், ஜன 15 – மலேசிய இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் ஒற்றுமை விழாவாக மலரட்டும் என ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வேளையில் பொங்கல் கொண்டாடும் மலேசிய தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
பெரும் வேளாண் குடிமக்களாக வாழ்ந்த பண்டைத் தமிழர்கள், உழவுத் தொழிலையே முதண்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். அந்நாளைய பருவ நிலைக்கு ஏற்ப உழவுத் தொழிலையும் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டு, இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்தனர்.
வேளாண்மைத் தொழிலுக்கு துணை நிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழாவை குடும்பமாகவும் சமூகமாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு தமிழர்கள், தங்களுக்கிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்துக் கொள்வதற்கும் இந்த பொங்கல் திருநாளை பயன்படுத்திக் கொண்டனர். மலேசிய இந்தியர்கள் சமூக அளவிலும் மக்கள் தொகை அடிப்படையிலும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறோம். இதுதவிர அரசியல் வழியாகவும் நாம் சிதறுண்டு பிரிந்து நிற்கிறோம். நாம் ஒன்றுபட்டு ஒருமித்து இருந்தால்தான் , அரசியல் ரீதியாகவும் இன்னும் பல வகையிலும் அடைய வேண்டிய இலக்கை எட்ட முடியும் என்பதோடு நம் உரிமையையும் நிலை நாட்ட முடியும். எனவே இன்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த துணை நிற்க வேண்டும் என விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்