கோலாலம்பூர், டிச 26 – ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுச் போட்டிக்கு வலுவான ஹாக்கிக் குழு தயார்படுத்தப்படும் என தேசிய ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளரான அருள் செல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.
பயிற்சிக்கு அழைக்கப்பட்ட அனைத்து ஆட்டக்காரர்களும் பயிற்சியில் கலந்துகொள்வதற்கு முழு ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார். ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறும் குழுக்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
ஏற்கனவே தேசிய குழுவில் இடம் பெற்றிருந்த ஏழு ஆட்டக்காரர்கள் இப்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டனர். அவர்கள் நல்ல திடகாத்திரத்துடன் உள்ளனர். சிலர் நியூசிலாந்திற்கான நட்புமுறை ஆட்டத்தில் கலந்து கொண்ட பின் நாடு திரும்பியுள்ளனர்.
ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் மலேசியா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகியவவை இடம் பெற்றுள்ளன . ஜனவரி 1 அல்லது 2ஆம் தேதியில் மலேசிய குழுவுக்கு தேர்வு செய்யப்படும் ஆட்டக்காரர்களின் முழு பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என அருள் செல்வராஜ் தெரிவித்தார்.