![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-07-29-PM-4051.jpg)
பேங்கோக், ஜூலை -2, தாய்லாந்தில் குழந்தைகளுக்கான ஓட்டப் போட்டியில் 5 வயது சிறுவன் எதிர்பாராமல் வெற்றி பெற்ற வீடியோ வைரலாகியுள்ளது.
ஓடுவதற்கு மற்ற சிறுவர்கள் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருக்க, இவன் மட்டும் தனது தாயின் காலை இருகப் பற்றிக் கொண்டு அழுதான்.
அவன் பயத்தில் அழுதது அங்கிருந்தோரின் முகத்தில் மட்டுமல்லாமல் அவனது தாயின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது.
இந்நிலையில், விசில் ஊதப்பட்டதும் திடீரென தாய் முன்நோக்கி ஓடத் தொடங்கினார்.
ஏற்கனவே ஓடுவதற்கே அழுதவன், இப்போது தாயும் தன்னை விட்டு ஓடுகிறாரே என்ற கூடுதல் பயத்தில் அழுதுக்கொண்டே தாயை விரட்டிச் சென்றான்.
ஓடியவன் வெற்றிக் கோட்டை தொட்டு முதலாவதாக வாகை சூடினான்.
கவலையில் இருந்த சிறுவன், முதல் பரிசை வென்றதும் புன்முறுவல் பூத்தான்.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மகனுக்கு ஊக்கம் கொடுத்து அவனை ஓட வைத்த தாயைப் பாராட்ட வேண்டும் என சிலரும், அதெப்படி அவர் அப்படி செய்யலாம், அது நேர்மையான வெற்றி அல்லவே என மேலும் சிலரும் கூறினர்.
அதிலும் ஒருவர், இதுவே எங்கள் நாடாக இருந்தால் அச்சிறுவனின் வெற்றி ரத்துச் செய்யப்பட்டு, இரண்டாவதாக வந்தவனுக்கு பரிசு கொடுக்கப்பட்டிருக்கும் எனக் கூறினார்.
ஓட்டப்பந்தயக் களம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்; ஆனால் அவனது தாய், சமயோசிதமாக சிந்தித்து மகனை வெற்றிப் பெற வைத்தது செல்லாது என அவர் சற்று கோபத்துடன் சொன்னார்.