கோலாலம்பூர், நவ 27 – பினாங்கு கெப்பளா பத்தாஸில் நடைபெற்ற தேசிய நிலையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கோரினார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை தாம் உறுதிப்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார். உண்மையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருக்கக்கூடாது. இம்மாதம் 29ஆம் தேதி பினாங்கு மாநில நிலையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து இடம் பெறும் என தாம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். அந்த நிகழ்ச்சியில் பினாங்கு கல்வியாளர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கும் எந்தவொரு தடையும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இப்படியொரு பிரச்னை ஏற்படாது என்ற உறுதியையும் தாம் வழங்குவதாக இன்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சின் 2024 ஆண்டு விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது பாட்லினா சிடேக் கூறினார். இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்ட அதிகாரிக்கு எதிராக கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து இடம்பெறத் தவறியதற்கு நாங்கள் முழு பொறுப்பை ஏற்கிறோம். எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற உணர்வு எதுவும் எங்களுக்கு கிடையாது என்றும் பாட்லினா சிடேக் வலியுறுத்தினார்.