ஜொகூர் பாரு, மார்ச் 17 – பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதற்காக இந்தியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 4 பெண்கள் ஜொகூரில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
24 முதல் 39 வயது வரையிலான அவர்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் போலீஸ் பாதுகாப்பாக மீட்டதாக, ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
Larkin Idaman பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
அதே சோதனையில், விபச்சார விடுதியின் நிர்வாகி மற்றும் விலைமாதர்களை கொண்டு போய் விடுவதும் வருவதுமாக இருந்த 32 வயது உள்நாட்டு ஆடவரும், இந்திய பிரஜையான 36 வயதுப் பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர்.
அதில் அவ்வாடவன் போதைப்பொருள் உட்கொண்டது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத் துறையிலும், வீட்டுப் பணிப்பெண்களாகவும் வேலை செய்யலாம் என ஏமாற்றப்பட்டு, அந்நால்வரும் இங்கே கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.
மலேசியா வந்திறங்கியதும், அடைத்து வைக்கப்பட்டு மாதத்திற்கு 2,300 ரிங்கிட் சம்பளத்தில் விலைமாதர்களாக செயல்பட அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டது விசாரணையில் அம்பலமானது.
கைதான இரு சந்தேக நபர்களும் மார்ச் 22 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை, மீட்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் 21 நாட்களுக்கு இடைக்கால அடைக்கலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.