கோலாலம்பூர், ஜன 17 – பராமரிப்பு செலவினம் உயர்ந்திருப்பதால் பள்ளி பஸ் கட்டணம் உயர்வது தவிர்க்க முடியாது என அகில மலேசிய பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பள்ளி பஸ் கட்டண உயர்வு பெற்றோர்களுக்கு சுமையாக இருந்தாலும் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லையென பள்ளி பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டத்தோ முகமட் அஷ்பர் அலி தெரிவித்தார். நகர்ப்புறங்களில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் பள்ளி பஸ் நடவடிக்கை மற்றும் பரமாரிப்பு செலவு உயர்ந்துவிட்டதால் பள்ளி பஸ் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறுவழியில்லையென அவர் கூறினார். அநேகமாக எதிர்வரும் மார்ச் மாதம் புதிய கல்வி தவணை தொடங்கும்போது பள்ளி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் இந்த கட்டண விகித உயர்வில் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
சுமார் ஐந்து ரிங்கிட் உயர்ந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அதுவே 10 முதல் 20 ரிங்கிட் வரை உயர்ந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பள்ளி பஸ்களில் அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனிடையே பள்ளி பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.