கோலாலம்பூர், டிசம்பர் 26 – ஸ்ரீ ஹர்தமாஸ் சுற்று வட்டாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குப்பை எதிர்ப்பு சோதனை நடவடிக்கையின் வாயிலாக, 12 வணிக தளங்களுக்கு, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின், சுகாதாரம் – சுற்றுசூழல் துறையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர்.
நடைப்பாதைகள் மற்றும் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, வியாபாரிகளும், பொது மக்களும் சுற்றுசூழல் தூய்மையை பராமரிப்பதை உறுதிச் செய்யும் நோக்கத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, DBKL ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
அந்த சோதனையின் போது, பல்வேறு குற்றங்களுக்காக, 12 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
பொது இடங்களில் வியாபாரம் சார்ந்த பொருட்களை வைத்தது, கால்வாயில் நச்சு கழிவுகளை வீசியது, கண்ட இடங்களில் அசுத்தத்தை ஏற்படுத்தும் குப்பைகளை வீசியது ஆகியவை அந்த குற்றங்களில் அடங்கும்.