காஜாங், ஜூன் 27 – சிலாங்கூர், உலு லங்காட்டிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பூனைக்குட்டிக்கு எரியூட்டிய குற்றத்தை ஒப்புக் கொண்ட 13 வயது பதின்ம வயது இளைஞன், இன்று முதல் ஓராண்டுக்கு நன்னடத்தையை பேண வேண்டுமென, காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை காலகட்டத்தில், அவன் சமூக நலத் துறையின் பட்டறையிலும் பங்கேற்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் பணித்துள்ளார்.
அதோடு, இதுவரை பள்ளிக்கு சென்றிராத அந்த இளைஞன், ஓராண்டுக்கு, இரவு மணி பத்து முதல் அதிகாலை மணி ஆறு வரை வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி, பிற்பகல் மணி 1.08 வாக்கில், உலு லங்காட்டிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர இரு ஆடவர்களுடன் இணைந்து பூனைக்கு எரியூட்டியதோடு, அதற்கு கொடூரமான வலியை ஏற்படுத்தியதாக, அந்த பதின்ம இளைஞனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அச்சம்பவம் தொடர்பான, காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.