
காஜாங், ஆகஸ்ட் 5 – காஜாங் எம்ஆர்டி (MRT) நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது சிவப்பு நிற சாயம் தெளித்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷ்னர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof) கூறுகையில், 48 வயதுடைய பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அவர் காலை 6 மணியளவில் தனது பெரோடுவா மைவி காரை நிலையத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் திரும்பியபோது, அவரது காரின் வலது பக்க கண்ணாடியில் சிவப்பு சாயம் தெளிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் சில வாகனங்களும் இதேபோல் சிவப்பு சாயம் தெளிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் மலேசிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சொத்துச் சேதம் விளைவித்த குற்றத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் போலீசாரை தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



