
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-4 – பல்லின சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும் மதத் தலைவர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
சபா, கோத்தா கினபாலுவில் நடைபெற்ற ‘மனித வளர்ச்சி மற்றும் கண்ணியத்திற்கான பல் சமய பங்காளித்துவம்’ குறித்த வட்டமேசை கலந்துரையாடலில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் சார்ந்ததல்ல, அது கண்ணியம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தை உள்ளடக்கியதாகும்.
இந்நிலையில், சமயங்களுக்கு இடையேயான ஈடுபாட்டை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட Harmony MADANI திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுவான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப் பல் சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தனது வியூக கவனத்தைச் சமூக நல்லிணக்கத்திலிருந்து கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடுகள் அடிப்படையில் ஒரு தேசியக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி நகர்த்துகிறது என்றும் டத்தோ ஏரன் தெரிவித்தார்.



