கோலாலம்பூர், ஏப்ரல் 23 – உலக சந்தையில், காப்பி மற்றும் கோகோ மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதை தொடந்து, தனது தயாரிப்பிலான சில பொருட்களின் விலை உயர்த்தப்படக்கூடுமென, நெஸ்லே மலேசியா நிறுவனம் கோடிகாட்டியுள்ளது.
எனினும், அந்த விலை ஏற்றம், பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு, கூடுதல் கவன்முடன் செய்யப்படுமென, நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுவான் அரனோல்ஸ் கூறியுள்ளார்.
அதனால், அடுத்த சில மாதங்களில், நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் ஒன்று அல்லது இரு தயாரிப்புகளின் விலையில், சிறிது அதிகரிப்பு இருக்கலாம், என அரனோல்ஸ் சொன்னார்.
மோசமான வானிலை மாற்றங்கள், உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், உலகளவில் கோகோ மற்றும் காபி விலைகள் உயர்ந்து வருகின்றன.
குறிப்பாக, உலகளவில் கோகோ அதிகம் உற்பத்தி செய்யப்படும் மேற்கு ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய நாடுகளில், எல் நினோ பருவநிலை மாற்றத்தால், அந்த மூலப்பொருள் உற்பத்தியும், அறுவடையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல, இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து பிரசித்தி பெற்ற ரோபஸ்டா மற்றும் உயர்தர அராபிகா பீன்ஸ் காப்பியின் விலையும் உயர்ந்துள்ளது.
அதனால், அனைத்துலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, அவ்விரு மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் சில பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் துல்லியமாக ஆராயப்படுவதாக, அரனோல்ஸ்வ் தெளிவுப்படுத்தினார்.
இவ்வேளையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவுப் பொருட்களில், கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த அரனோல்ஸ்வ், நெஸ்லே எங்கு செயல்பட்டாலும், அங்குள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அது இயங்கும் என்றார்