கூலாய், ஜூன் 20 – ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி, ஜோகூர், கூலாயை சேர்ந்த வியாபாரி ஒருவர், மூன்று லட்சத்து நான்காயிரத்து 200 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம், கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பில், முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த விளம்பரம் ஒன்றை, அந்த 54 வயது நபர் பாத்ததாக, கூலாய் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் டான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய அந்த வியாபாரிக்கு, அதிக லாபம் கிடைக்கும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை நம்பி செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்த அந்த வியாபாரி, கணக்கு ஒன்றை பதிவுச் செய்துள்ளார்.
அதன் பின்னர், இவ்வாண்டு மார்ச் முதல் மே வரையில், மொத்தம் மூன்று லட்சத்து நான்காயிரத்து 200 ரிங்கிட் பணத்தை, அக்கும்பல் வழங்கிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அந்த வியாபாரி செலுத்தியுள்ளார்.
எனினும், அதன் வாயிலாக கிடைத்த லாபத்தை செயலி மூலமாக பார்க்க முடிந்த போதும், அதனை மீட்க முடியாமல் போனதால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அவர் நேற்று போலீஸ் புகார் செய்ததாக, லீ ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
அதன் பின்னர், அக்கும்பலை தொடர்புக் கொள்ள முடியவில்லை எனவும் லீ சொன்னார்.
குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.