கோலாலம்பூர், டிசம்பர் 13 – அடுக்குமாடி கார் நிறுத்துமிட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து, சுமார் 20 ஆயிரம் கோமுட்டர் பயணிகளும், பத்தாயிரம் ETS பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சம்பவம், நேற்று மாலை மணி 5.53 வாக்கில், சிலாங்கூரிலுள்ள, ரவாங் மற்றும் குவாங் நிலையங்களுக்கு இடையில், 355.749-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த வேளை; அதனால், இருவழி இரயில் சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட கிரேன் தண்டவாளத்தை நோக்கி சாய்ந்ததால், அதன் மேல்பகுதி உடைந்து தண்டவாளத்தில் விழுந்ததாக, KTMB தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முஹமட் ராணி ஹிசாம் சம்சுடின் தெரிவித்தார்.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் எற்படவில்லை.
அச்சம்பவத்தால், KL சென்ட்ரலில் இருந்து தஞ்சோங் மாலிம் வழித்தடத்திற்கான, KTM கோமுட்டர், ETS மின்சார இரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
அதனால், நள்ளிரவு வரையில், ஏழாயிரம் கோமுட்டர் பயணிகளும், மூவாயிரம் ETS மின்சார இரயில் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
இன்று அந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்குமென நம்பப்படுகிறது.
கோமுட்டர், ETS சேவைகள் வழக்கத்துக்கு திரும்பும் வரை அந்நிலை தொடரும் என முஹமட் ராணி சொன்னார்.
எனினும், சம்பந்தப்பட்ட தண்டவாளத்தை பழுதுபார்க்கும் பணிகள் 24 மணி நேரத்திற்குள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, பாதிக்கப்பட்ட கோமுட்டர், ETS நிலையங்களில் கூடுதல் பேருந்து சேவைகள் ஏற்படுத்தி தரப்படும்.
அச்சம்பவத்தால், பயணத்தை தொடர விரும்பாத பயணிகளுக்கு, KTMB இ-வொல்லட் வாயிலாக கட்டணம் திரும்ப தரப்படும்.