கெமமான், ஜனவரி 15 – திரங்கானு, சுக்கையில், சாலை தடுப்பு சோதனையிலிருந்து தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிளோட்டி மோதியதில், சார்ஜென்ட் பதவி வகிகும் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
எனினும், அதே விபத்தில், காயத்திற்கு இலக்கான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, பின்னர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இதர போலீஸ் அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று மாலை மணி 6.20 வாக்கில், ஜாலான் லிம்போங் சுக்கை சாலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி இதர ஐவருடன் இணைந்து சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்விபத்து நிகழ்ந்ததாக, கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.
யமஹா LC ரக மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவனை போலீசார் நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
எனினும், அவ்வாடவன் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக ஹன்யன் சொன்னார்.
அவ்விபத்தால், போலீஸ் அதிகாரி கையில் காயமடைந்த வேளை ; 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி சாலையில் விழுந்ததால், காயமடைந்தான்.
அதனால், அவ்விருவரும் சிகிச்சைக்காக, கெமமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதே சமயம், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் சாலை வரி காலாவதியாகி இருந்த நிலையில், அது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டிருந்ததும் சோதனையில் தெரிய வந்துள்ளது.