புத்ராஜெயா, ஜூன் 28 – நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான, வாக்களிப்பு ஆகஸ்ட்டு 17-ஆம் தேதி நடைபெறுமென, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனை முன்னிட்டு, ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வேளை ; முன்கூட்டியே வாக்களிப்பு ஆகஸ்ட்டு 13-ஆம் தேதி நடைபெறும்.
20 ஆயிரத்து 259 பதிவு பெற்ற வாக்காளர்களை கொண்டிருக்கும் நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக, 16 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் நடவடிக்கைகளை வழிநடத்த, 431 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ள நிலையில், 20 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படும்.
பெர்சத்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முஹமட் அஜிசி அபு நைமிடமிருந்து, இம்மாதம் 13-ஆம் தேதி, கிளந்தான் சட்டமன்றம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை பெற்றதை தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
அதோடு, நெங்கிரி சட்டமன்ற தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி அஜிசி செய்திருந்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.