
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் இன்று காலை, ஜாலான் லாடாங் செராசா பகுதியில் (Jalan Ladang Serasa) உள்ள ரப்பர் தோட்டம் அருகிலுள்ள ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் யானையின் கால்தடங்கள் மற்றும் சாணம் கண்டுபிடிக்கப்பட்டதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் சிக் சூன் ஃபூ (Superintendan Sik Choon Foo) தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், அந்த நபர் காட்டுயானைகள் கூட்டத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சம்பவத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்த அடையாளமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக குவா முசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காடு மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், யானைகள் வாழும் அபாயகரமான பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



