கோலாலம்பூர், டிச 31 – கிள்ளான், ஜாலான் பெர்சியரன் பெகாகாவில் பரபரப்பான சாலையில் பேஸ்பால் கட்டை மற்றும் பாராங் வைத்திருந்த இருவர் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஓட்டுனரை தாக்கி வழிப்பறி கொள்ளையடித்தனர். சாலையில் பல வாகனங்கள் இருந்தபோது தமது காரை நிறுத்திய 40 வயது மதிக்கத்தக்க அந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஓட்டுனரிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்பான 56 வினாடிகளைக் கொண்ட காணொளி பதிவு ஒன்று X சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கார் ஓட்டுனர் கை விரலில் எழும்பு முறிவுக்கு உள்ளானார் . கிள்ளான், ஜாலான் மேருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பிற்பகல் மணி 2 .50 அளவில் அந்த கார் ஓட்டுனர் அப்போதுதான் பணத்தை மீட்டுக்கொண்டு கிள்ளான், புக்கிட் திங்கியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் கமலாரிஃபின் அமன் ஷா தெரிவித்தார்.
கருப்பு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அந்த கார் ஓட்டுனர் சென்று கொண்டிருந்தபோது பெர்சியரன் பெகாகாவில் அவரது காரை இருவர் நிறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவன் பேஸ்பால் கட்டையின் மூலம் அக்காரின் முன்புறம் பயணி அமரும் பகுதிக்கு அருகேயுள்ள கதவுக் கண்ணாடியை உடைத்துள்ளான். பாராங் கத்தி வைத்திருந்த மற்றொரு ஆடவன் ஓட்டுனர் இருக்கைப் பகுதியிலுள்ள கதவின் கண்ணாடியை உடைந்துள்ளான் என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கமலாரிஃபின் தெரிவித்தார். அந்த கார் ஓட்டுனர் வைத்திருந்த மடிக்கணினி பேக்கை எடுத்துக்கொண்டு டொயோட்டா யாரிஸ் வாகனத்தில் அந்த இரண்டு நபர்களும் தப்பிச் சென்றதாக கமலாரிஃபின் தெரிவித்தார்.