கிள்ளான், ஜூன் 14 – நான்கு வயது சிறுவனை அடித்த குற்றச்சாட்டு தொடர்பில், பாலர் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதித்து, சிலாங்கூர், கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
25 வயது எம்.மாலினி எனும் அந்த ஆசிரியர், தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
மாலினி கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 13-ஆம் தேதி, காலை மணி 9.36 வாக்கில், ஜாலான் பண்டமாரானிலுள்ள, பாலர் பள்ளி ஒன்றில், மாலினி அக்குற்றத்தை புரிந்துள்ளார்.
அதனால், சம்பந்தப்பட்ட சிறுவன் கன்னம் மற்றும் உடலின் பின்புறத்தில் காயங்களுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
இவ்வேளையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மாலினி மேல்முறையீடு செய்துள்ளார்.
அதனால், மாலினிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை, ஒத்தி வைக்கப்பட்டுள்ள வேளை ; அவரை ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, கால்சட்டையிலேயே மலம் களித்ததால், பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவரால் அடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன், காயத்திற்கு இலக்கானதாக போலீஸ் புகார் செய்யப்பட்டது.
கழிவறைக்கு செல்லுமாறு ஆசிரியர் கூறிய போதும், அமர்ந்திருந்த இடத்தை விட்டு அச்சிறுவன் எழ மறுத்ததால், ஆசிரியர் அவனை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.