குவந்தான், டிச 11 – ECRL எனப்படும் கிழக்குக்கரை ரயில் தொடர்புக்கான முதலாவது ரயில் தண்டவாளம் நிர்மாணிப்புப் பணியை மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். கெபெங்கில் செக்சன் 10 இல் ECRL ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஆகியோர் உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 665 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த ரயில் தண்டவாளம் 20 நிலையங்களுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. இவற்றில் பயணிகளை ஏற்றக்கூடிய 10 ரயில் நிலையங்களும் சரக்குகளை ஏற்றக்கூடிய 10 ரயில் நிலையங்களும் அடங்கும் .
2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி தெடங்கப்பட்ட 50 பில்லியன் ரிங்கிட் செலவிலான இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்படத் தொடங்கும் . இந்த திட்டம் தொடங்கும்போது பயணிகள் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும், சரக்கு ரயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். மலேசியாவில் ECRL மாபெரும் ரயில் அடிப்படை வசதிக்கான கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டதற்கான அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமைவதாக சீன தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் தலைவர் வாங் தொங்சவ் தெரிவித்தார். குவாந்தான் துறைமுக நகர் நிலையமான கெபெங்கிலிருந்து திரெங்கானுவின் டுங்குன் வரையிலான 94 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ரயில் தண்டவாளம் நிர்மாணிக்கும் முக்கிய பணி இதன் மூலம் தொடங்கியுள்ளது.