![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/71719551181_ular-700x470.jpg)
கோலா லிபிஸ், ஜூன் 28 – பஹாங், கோலா லிபிசிலுள்ள, கூனோங் தஹான் (Gunung Tahan) மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, UPM – புத்ரா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பாம்பு தீண்டியதால், அவர் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு மணி 7.46 வாக்கில் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை, பஹாங் தீயணைப்பு மீட்புத் துணை துணை இயக்குனர் இஸ்மாயில் அப்துல் கானி (Ismail Abdul Ghani) உறுதிப்படுத்தினார்.
மாலை மணி ஆறு வாக்கில், போத்தா முகாமில் குளித்துக் கொண்டிருந்த போது அவரை பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
அதனால், மிகவும் சேர்வடைந்த 20 வயது சித்தி நுராகிலா அஸ்மி எனும் அம்மாணவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், இரு மருத்துவர்களுடன் ஹெலிகப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இஸ்மாயில் சொன்னார்.
அம்மாணவி, மேல் சிகிச்சைக்காக பின்னர் கோலா லிபிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய கூனோங் தஹான் மலையேறும் நடவடிக்கை, இம்மாதம் 30-ஆம் தேதி நிறைவடையும்.
அந்த மலையேறும் நடவடிக்கையில், 40 பங்கேற்பாளர்களுடன், மலையேறிகள் இருவரும், பெர்ஹிலிதான் அதிகாரி ஒருவரும், மூன்று சமூக ஆர்வலர்களுடம் உடன் செல்கின்றனர்.