
புத்ரா ஜெயா, மே 21- மலேசிய சுகாதார அமைச்சு தனது நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆபத்தான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவசமாக இன்ஃப்ளூயன்ஸா (influenza) தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டத்தில் 65.16 விழுக்காடு முதியவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில், இன்னும் 56,237 தடுப்பூசிகள் தயார்நிலையில் உள்ளதெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் இறுதியில் முடிவடையும் இச்சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட 649 சுகாதார மருத்துவமனைகளில் வழங்கப்படுவதை மக்கள் அறிந்திருக்க வேண்டுமென்றும் MySejahtera-வில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பதிவுச் செய்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சு கேட்டுக் கொள்கின்றது.
MySejahtera செயலியைக் கொண்டிராதவர்கள், மருத்துவமனைக்கு நேரே வந்து தடுப்பூசிகளைப் பெற்று கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுடைய ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்று மலேசிய சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.