கூலாய், மார்ச்-15 – ஜொகூர் கூலாயில் 70 வயது முதியவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சதிநாச வேலையில் ஈடுபட்ட சந்தேகத்தில், உள்ளூர் ஆடவர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.
16 வயது பையன் உள்ளிட்ட அம்மூவரும் பண்டார் ஸ்ரீ அலாமில் இரு வேறு சோதனைகளில் கைதானதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ‘Tan Seng Lee’ தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமை மதியம், தாமான் டாமாய், ஜாலான் ஜெலாத்திக்கில் உள்ள தனது வீட்டிற்கு வந்துப் பார்த்த போது வேலியின் முன்புறம் ஏதோ எரிக்கப்பட்ட தடயங்கள் இருப்பதை கண்டு அம்முதியவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு CCTV கேமராவைப் பார்த்ததில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் பெட்ரோல் குண்டுகளை அங்கு வீசி விட்டுச் செல்வதை கண்டு, அப்பெரியவர் போலீசில் புகார் செய்தார்.
ஆனால், மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பேசிகள், சம்பவத்தின் போது பயன்படுத்தியத் துணிகள் போன்றவைக் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும், அந்த முதியோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை Tan Seng Lee தெரிவிக்கவில்லை.
ஆனால், வெளியாரிடம் பணம் பெற்றுக் கொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசுவதை ஒரு வேலையாக வைத்திருப்பதை, அம்மூவரும் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.
ஆக, கூலாயில் பல்வேறு வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களுக்கும் அக்கும்பலுக்கும் தொடர்பிருக்கும் என போலிஸ் சந்தேகிக்கிறது.
மூவரில் இருவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணைக்காக ஞாயிற்றுக் கிழமை வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.