
கூலாய், ஜூன்-23 – கூலாயில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நான்கு லாரிகள் மற்றும் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
செடெனாக் (Sedenak ) மற்றும் கூலாய் பகுதிகளுக்கு இடையே தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் காலை சுமார் 8 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தினால் அப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இணையத்தில் பரவி வரும் படங்கள் மற்றும் காணொளிகளில், பல லாரிகள் மற்றும் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுவதையும் காணமுடிந்தது.
விபத்து காரணமாக இரு திசைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக இதற்கு முன் ‘பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் தனது போக்குவரத்து அறிவிப்பில் தெரிவித்துள்ளது.



