கூலிம், ஜூன்-27 – லூனாஸ், சுங்கை செலுவாங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இடமாற்ற, கோவில் நிர்வாகத்துடன் கெடா மாநில அரசு ஒருவழியாக இணக்கம் கண்டிருக்கிறது.
அவ்விரு தரப்புக்கும் இடையில் மாதக்கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக அவ்விவகாரம் சுமூகத் தீர்வை எட்டியதாக, சீனர்-இந்தியர்-சயாமியர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ச்சியா ஷென் (Wong Chia Zhen) தெரிவித்தார்.
இதையடுத்து, 71 ஆண்டு கால பழைமை வாய்ந்த அக்கோயில், 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய இடத்திற்கு வரும் செப்டம்பரில் இடம் பெயருகிறது.
இதன் மூலம் முறையாகப் பதிவுச் செய்யப்பட்ட வழிபாட்டுத் தலமென்ற அந்தஸ்தையும் அக்கோயில் பெறுவதாக வோங் சொன்னார்.
கூலிம் மாவட்ட நில அலுவலகத்தில் இன்று கோவில் நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்து கருத்திணக்கத்தை இறுதிச் செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இச்சுமூகத் தீர்வானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கெடா மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக வோங் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, உரிய இடத்தில் ஆலயத்தை இடமாற்ற ஒப்புக் கொண்ட மாநில அரசுக்கு கோயில் தலைவர் கே.கிஷோர் குமார் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
Kulim Hi-Tech Park விரிவாக்கத் திட்டத்திற்கு வழி விடும் வகையில், அக்கோயில் உடைபடும் அபாயத்தில் இருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அதில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.