யான், ஜனவரி 30 – கெடா, குவார் செம்படாக், தாமான் டேசா அமானிலுள்ள, மளிகை கடை ஒன்றில் அத்துமீறி நுழைந்து, தீயை அணைக்க பயன்படுத்தப்படும் கருவியை பயன்படுத்தி, நுரையை அடித்து, கொள்ளையிட்ட இரு சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருப்பு நிற “ஹூடி” ஆடையை அணிந்திருக்கும் அவ்விரு ஆடவர்களும், கடையை கொள்ளையிடும் காட்சிகள், அங்கிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தொடங்கி அவை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
கடந்த வாரம் வியாழக்கிழமை, இரவு மணி 7.24 வாக்கில், அந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததை, யான் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் ஷானாஸ் அக்தர் ஹாஜி உறுதிப்படுத்தினார்.
கடைக்குள் திடீரென புகுந்த இரு ஆடவர்கள், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் கருவியை கொண்டு, அங்கிருந்தவர்களை நோக்கி நுரையை அடித்ததோடு, “கள்ளா” அல்லது பணப் பதிவேட்டு இயந்திரத்தை அப்படியே தூக்கிச் சென்றனர்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 395-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் வேளை ; கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக ஷானாஸ் சொன்னார்.
முன்னதாக, கடைக்குள் அத்துமீறி நுழைந்து தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்தி, நுரையை அடித்த இரு ஆடவர்கள், அங்கிருந்த கள்ளா இயந்திரத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் 30 வினாடி காணொளி பரவலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது