பிரிட்டன், டிசம்பர் 29 – பிரிட்டனையும், அயர்லாந்தையும் கெரிட் புயல் தாக்கத் தொடங்கியுள்ளது.
அதனால், கடந்த புதன்கிழமை தொடங்கி, அங்கு மோசமான வானிலை நீடிக்கிறது.
பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய புயல்மழை பெய்து வருவதால், வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
அதனால், குறிப்பாக அந்நாடுகளின் வான் போக்குவரத்துச் சேவைகள் பல தாமதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதனையும் தாண்டி, பயணத்தை தொடரும் விமானங்கள் மிகவும் சவாலான சூழலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஹூத்ரோ விமான நிலையத்தில், இம்மாதம் 27ஆம் தேதி, மோசமான புயல்மழையின் போது, தரையிறங்கிய அமெரிக்க விமானம் ஒன்று நிலைத்தடுமாறும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்சிலிருந்து, ஹூத்ரோ விமான நிலையம் வந்தடைந்த அந்த போயிங் 777 ரக விமானம், தரையிறங்க முடியாமல் புயல் காற்றில் நிலைதடுமாறும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
எனினும், இயற்கையின் சீற்றத்தில் சிக்கி தவித்த அந்த விமானம், இறுதியில் பாதுகாப்பாக இலக்கை அடைந்தது. அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.