புத்ராஜெயா, மார்ச் 14 – ஒன்பது ஆண்டுகளுக்கு முன், அரசாங்க துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
அதில், முன்னாள் நோயியல் நிபுணரான 61 வயது கர்னல் டாக்டர் ஆர்.குணசேகரன், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்து வந்த 53 வயது எஸ். ரவி சந்திரன் உட்பட 32 வயது ஆர்.தினேஸ்வரன், 31 வயது எ.தினேஸ் குமார், 34 வயது எம்.விஸ்வநாத், 31 வயது எஸ்.நிர்மலன் ஆகியோர் அடங்குவர்.
டத்தோ ஹடாரியா சையிட் இஸ்மாயில் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, ஒருமனதாக அந்த தீர்ப்பை அறிவித்தனர்.
கெவின் மொரைஸைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு, ஜூலை பத்தாம் தேதி, அவர்களுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2015-ஆம் ஆண்டு, செப்டம்பர் நான்காம் தேதி, காலை மணி ஏழுக்கும், இரவு மணி எட்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுபாங் ஜெயா, ஜாலான் டுதாமாஸ் செந்தூல் சாலையில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கபட்டது.
அவரது உடல், அதே மாதம், 16-ஆம் தேதி, சுபாங் ஜெயாவிலுள்ள, பெர்சியாரன் சுபாங் மேவாவில், கான்கிரீட் நிரப்பப்பட்ட டிரம்மில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.