
கேரளா, ஜூன்-10 – சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலொன்று இந்தியாவின் கேரள மாநிலம் அருகே நேற்று நடுக்கடலில் தீப்பிடித்தது.
650 சரக்குக் கொள்லன்களுடன், கப்பல், இலங்கையின் கொழும்புவிலிருந்து மும்பை நோக்கி செல்லும் வழியில் இச்சம்பவம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளால் குறைந்தது 40 கொள்கலன்கள் கடலில் விழுந்தன.
இதையடுத்து இந்தியக் கடலோர காவல்படை விமானங்களும் போர்விமானங்களும் உடனடி மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டன.
இவ்வேளையில், அக்கப்பல் சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட கப்பல் என்பதை அக்குடியரசின் கடல் மற்றும் துறைமுக அதிகாரத் தரப்பு உறுதிப்படுத்தியது.
சம்பவத்தின் போது கப்பலில் 22 பேர் இருந்தனர்; ஆனால் அவர்களில் எவரும் சிங்கப்பூர் பிரஜைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
உயிர் பயத்தில் கடலில் குதித்த 18 பேர் காப்பாற்றப்பட்டனர்; அவர்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான உயிர்காக்கும் படகுகளுக்கு மாற்றப்பட்டு புதிய மங்களூர் துறைமுகம் கொண்டுச் செல்லப்பட்டனர்.
எஞ்சிய நால்வரைக் காணவில்லை; அவர்களில் இருவர் தைவானியர்கள், ஒருவர் மியன்மார் நாட்டவர், மற்றொருவர் இந்தோனேசியர்.
இந்தியக் கடலோர காவல்படை X தளத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கப்பலில் இருந்து அடர்த்தியான கரும்புகை எழுவதையும், சில கொள்கலன்கள் திறந்த நிலையில் மற்றும் ஒழுங்கற்ற நிலையில் கிடப்பதையும் காட்டின.
வெடிக்கும் அளவுக்கு கொள்கலன்களில் அப்படி என்னதான் சரக்கு இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் கருத்துரைக்கவில்லை.