புதுடெல்லி, ஜனவரி 8 – நித்யானந்தாவின், கைலாசா இந்து பல்கலைக்கழகத்தில், முனைவர், PHD பட்டப் படிப்புகளை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு, அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கைலாசாவுக்கு வர முடியவில்லை என ஏக்கமா? கவலையை விடுங்கள். கைலாசா உங்களை தேடி வரப்போகிறது.”
“நீங்கள் எங்கு இருந்தாலும், பட்டம் அல்லது முனைவர் பட்டக் கல்வி வாய்ப்புகளுடன் கைலாசா உங்களை தேடி வரும்.”
குறிப்பாக, “ஆன்மீகம் அல்லது அறிவியல் துறைகளில் மேற்கல்வியை தொடர விருப்பம் உள்ளவர்கள், இன்றே கைலாசா இந்து பல்கலைக்கழகத்தில் இணைய விண்ணப்பம் செய்யுங்கள்” என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நித்யானந்தாவின் காணொளி ஒன்றும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதுடன், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய், நாணயங்கள், கடப்பிதழ் ஆகியவற்றையும் அறிவித்திருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
தற்போது, வெளியாகியுள்ள இந்த புதிய அறிவிப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதோடு, பலதரப்பட்ட கருத்துகளையும் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.