கோலாலம்பூர், டிச 4 – நாட்டின் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரான மறைந்த கோபால் ஸ்ரீ ராமின் 90 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சுமார் 10,000 புத்தகங்கள் மற்றும் சட்ட சஞ்சிகைகளை அவரது குடும்பத்தினர் மலாயா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை நூலகத்திற்கு வழங்கினர். 1890 ஆம் ஆண்டு முதல் இருந்த சட்ட சஞ்சிகைகளும் மற்றும் புத்தகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன் 5 டன் லோரியில் மலாயா பல்கலைக்கழகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அனைத்து புத்தகங்களையும் திட்டமிட்ட வகையில் ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையில் நூலகத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக மலாயா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை நூல் நிலையத்தின் தலைவர் அடிடா முகமட் அமீன் தெரிவித்தார்.
அந்த புத்தகங்கள் அனைத்தும் சுத்தமாகவும் நல்ல நிலையிலும் இருந்ததாக அவர் கூறினார். 1,890 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரிய சட்ட இதழ்கள் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்தமாகவே இந்த புத்தகங்கள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை அடைவதாக இருக்க வேண்டும் என ஸ்ரீ ராம் குடும்பத்தினர் விரும்பியதாக அடிடா தெரிவித்தார். இளம் வழக்கறிஞர்கள் இந்த புத்தகங்களையும் சட்ட இதழ்களையும் பயன்படுத்தி சட்டத்துறையில் நல்ல நிபுணத்துவத்தை பெறுவதன் மூலம் நமது நீதி அமைப்பை நிலைநிறுத்த முடியும் என்று ஸ்ரீராமின் துணைவியார் டத்தின் ஸ்ரீ சந்திரா ஸ்ரீராம் நம்பிக்கை தெரிவித்தார். தமது கணவர் சட்ட இதழ்கள் மற்றும் புத்தகங்களில் நம்ப முடியாத அளவிற்கு ஆர்வமாக இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜனவரி மாதம் மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட நூலகத்தில் ஸ்ரீராமின் புத்தக பிரிவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைப்பார் என அடிடா கூறினார்.