கோலாலபூர், டிச 10 – கோலாலம்பூர் கம்போங் சுங்கை பெஞ்சாலாவில் ஒரு வீட்டில் முதிய தம்பதி கொடுரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பில் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
40 வயது அந்த ஆடவன் ஒரு போதை பித்தன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோலாலம்பூர் போலிஸ் தலைவர் அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நேற்று மாலை 7 மணியளவில் அத்தம்பதி குத்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர்களின் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அதனை பார்த்த சாட்சி புகார் கொடுத்த பின்பு அங்கு விரைந்த போலிசார் அவ்விடத்தை சென்றடைவதற்குள் அத்தம்பதி இறந்த நிலையில் கிடந்தனர்.
வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி சென்ற அவர்களின் மகனை பின்னர் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.