கோலா சிலாங்கூர், ஜன 6 -கோலா சிலாங்கூரில் காலை உணவாக நாசி லெமாக் வாங்கச் சென்ற விவசாயி ஒருவர் தனது மைவி காரை பறிகொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜனவரி 5, வெள்ளிக்கிழமை காலை 8.15 வாக்கில்பெக்கான் இஜோகில் தனது காரை இயங்கிய நிலையிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாலை ஓரக் கடையில் நாசி லெமாக் வாங்கச் சென்றுள்ளார் அந்த விவசாயி.
அச்சமயம், அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் அந்த பச்சை நிற மைவி காரினுள் நுழைந்து காரை களவாடிச் சென்றுள்ளான். தனது கார் வேகமாக நகர்வதை கண்டவுடன்தான் அந்த விவசாயி தனது கார் திருடப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இச்சம்பவத்தை உடனடியாக முகநூலில் பகிர்ந்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார் அவர். இதற்கிடையில் போலிசிலும் தகவல் தெரிவிக்க, போலீசார் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடப்பட்ட காரில் தனது கைபேசியும் வீட்டு சாவியும் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.