கோலாலம்பூர், டிசம்பர் 18 – கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, மலேசியர்கள் “ஊக்க” தடுப்பூசியை போட்டுக் கொள்வதை காட்டாயமாக்கும் உத்தரவு எதையும் அரசாங்கம் வெளியிடவில்லை என, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் கூறியுள்ளார்.
தற்போதைக்கு, பொதுமக்கள் குறிப்பாக பாதிப்பை எதிர்நோக்கும் சாத்தியம் அதிகம் இருப்பவர்கள், கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது “பூஸ்டர்” அல்லது ஊக்க தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு மட்டுமே சுகாதார அமைச்சு ஊக்குவித்து வருவதை, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளருமான பாஹ்மி சுட்டிக்காட்டினார்.
அதனால், சமூக ஊடகங்களில், அது தொடர்வில் தவறாக வைரலாகி இருக்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட பாஹ்மி, அது போன்ற தகவல்களை பகிர்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், கோவிட்-19 ஊக்க தடுப்பூசிகள் தொடர்பான பிரச்சனைகளை தெளிவுப்படுத்துவதற்கு, நாட்டிலுள்ள, செய்தி ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்துவது குறித்து பரிந்துரைக்க தாம் விரைவில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட்டை சந்தித்து பேச போவதாகவும் பாஹ்மி சொன்னார்.