
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை
கோலாலம்பூர், பிப்ரவரி-10,
சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நேற்று அறிவித்துள்ள நிலையில் நாட்டிலுள்ள இந்து கோவில்கள் தொடர்பான நில மற்றும் நிர்வாக சிக்கல்களை முறையாக கையாள ஏதுவாக, மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட வேண்டும்.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அதனைப் பரிந்துரைத்துள்ளார்.
இப்பிரிவுக்கு ஆலோசனை வழங்கும் _think‑tank_ அமைப்பாகவும் நிபுணர் குழுவாகவும் செயல்பட மஹிமா தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
பிரதமரின் நேற்றைய உத்தரவு இந்து சமுதாயத்தை சினமூட்டுவதற்காக அல்ல, மாறாக நிலப் பிரச்னைகளைத் தவிர்க்கவும், கோவில்களை பாதுகாக்கவும் என்றே சிவகுமார் தெளிவுப்படுத்தினார்.
தவிர, இம்முயற்சி மலேசியாவில் உள்ள அனைத்து இந்து கோவில்களின் முழுமையான தரவுத்தளத்தை உருவாக்க உதவும்.
இதன் மூலம் கோவில் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் எளிதாகும் என்றார் அவர்.
மக்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து, உறுதியான ஆதாரங்களை சமர்ப்பித்து, அரசாங்கத்தின் நோக்கத்தை ஏற்றுக்கொள்வதே நாட்டின் அமைதி மற்றும் நலனுக்கான பாதையாகும்.
இப்போதே நாம் செயல்படா விட்டால், பின்னர் சட்டங்கள் மேலும் கடுமையாகும் போது நிலைமை மேலும் மோமசமாகி விடும் என சிவகுமார் நினைவுறுத்தினார்.



