புக்கிட் காயு ஈத்தாம், பிப் 7- சந்தேகத்திற்குரிய விபச்சார கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் 30 வெளிநாட்டினர்கள் புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்க, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நுழைவாயில் மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர். 19 தாய்லாந்து பெண்கள், 10 தாய்லாந்து ஆடவர்களுடன் கம்போடிய பெண் ஒருவரும் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கெடா குடிநுழைவு இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஸைன் தெரிவித்தார். நண்பகல் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 10 வாகனங்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 20 பெண் பயணிகள் முறையான பயண ஆவணங்களை காட்டத் தவறியதாகவும் அவர் தெரிவித்தார்.
8 பேரின் கடப்பிதழ்களில் முத்திரை இருந்தன. இதர 12 பேரின் கடப்பிதழ்களில் முத்திரை குத்தப்பட்டிருக்கவில்லை அல்லது நாட்டிற்குள் நுழைவதற்கான எல்லை பாஸ்களையும் கொண்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அனைத்து 29 தாய்லாந்து பிரஜைகளும் ஒரு கம்போடிய பிரஜையும் கைது செய்யப்பட்டதாக முகமட் ரிட்சுவான் தெரிவித்தார்