லாஹாட் டத்து, மார்ச் 18 – சபாவில் ஓடும் லாரியின் பின்னால் 3 சிறார்கள் Spider Kids போல தொங்கிக் கொண்டு தங்களது உயிரோடு விளையாடியச் சம்பவம் வைரலாகியுள்ளது.
அச்சிறார்களின் செயல்களைக் காட்டும் புகைப்படங்கள் லாஹாட் டத்து மாவட்டத்தில் உள்ள சாலையொன்றில் எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அப்புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவற்றுடன் இணைக்கப்பட்டிருந்த வாசகம் தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
அதாவது ‘ ஒரு கை, லாரியைப் பிடித்து தொங்குகிறது, மறு கை நிலா வரை கம் நுகர்கிறது’ என சினத்துடன் நையாண்டியாக எழுதப்பட்டுள்ளது.
ஒரு வித மயக்கத்தைத் தரும் ‘பொருளை’ உட்கொண்டு, தாங்கள் என்ன செய்கிறோம், அதனால் என்ன ஆபத்து வரப் போகிறது என்பதை உணராமல் இருப்பவர்களைக் குறிக்கும் விதமாக அந்த வாசகம் இடம் பெற்றிருக்கிறது.
எதிர்பார்த்தபடியே, நெட்டிசன்கள் அச்சிறுவர்களின் செயலைக் கண்டித்து வருகின்றனர்.
அச்சிறார்களின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் அது மருட்டலை ஏற்படுத்தலாம் என பெரும்பாலோர் கவலைத் தெரிவித்தனர்.
கொஞ்சம் தவறினாலும் அந்த லாரி ஓட்டுநருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
அவ்விவகாரம் தங்கள் காதுக்கும் எட்டியிருப்பதை உறுதிபடுத்திய லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ரொஹான் ஷா, அம்மூன்று சிறார்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகச் சொன்னார்.