கோத்தா கினபாலு, ஜனவரி 18 – சபா, லிகாஸில், கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றின், கிடங்கில் சிக்கிக் கொண்ட, ஆடவர் ஒருவரும் அவரது தோழியும், கரியமிலவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
43 வயது மதிக்கத்த அவ்விருவரும், கேபிள்கள் மற்றும் இரும்புகளை தேடிச் சென்ற போது, அந்த கிடங்கில் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது.
நெருங்கிய நண்பர்களான அவர்கள், கேபிள்கள் மற்றும் இரும்புகளை தேடி விற்க சென்றிருந்த போது, அந்த விபரீதம் நிகழ்ந்ததாக, கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ஜைடி அப்துல்லா தெரிவித்தார்.
நேற்று காலை மணி 9.30 வாக்கில், கிடங்கின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், உள்ளே அவர்கள் இருவரும் சுயநினைவு இன்றி கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
முன்னதாக, நேற்று அதிகாலை மணி இரண்டு வாக்கில், கைவிடப்பட்ட அந்த கட்டடத்தில், பழைய கேபிள்களையும், இரும்புகளையும் தேடி விற்கப்போவதாக கூறி விட்டு அவ்விருவரும் சென்றதாக, அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த நபர் ஒருவர் தெரிவித்ததாக ஜைடி சொன்னார்.
எனினும், அரை மணி நேரத்தில் அவர்களை தொடர்புக் கொள்ள முடியாமல் போனதால், மற்றொரு நண்பருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நபர், அங்கு அவர்கள் மயங்கி கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக, தீயணைப்பு மீட்புப் படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிடங்கின் கதவை உடைத்து சடலங்களை மீட்டனர்.
சவப்பரிசோதனையில், கரியமிலவாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.