லஹாட் டத்து, டிசம்பர் 12 – சபா, லஹாட் டத்துவிலுள்ள, Kampung Desa Bajau கிராமத்தில், சுமார் ஐந்து மீட்டர் நீளம் கொண்ட இராட்சத ஆண் முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதன் சடலம் கரைக்கு இழுத்து வரப்பட்டது.
APM – பொது தற்காப்பு படை மற்றும் லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர், 1.2 டன் எடை கொண்ட அந்த கொடிய ஊர்வன விலங்கை சுட்டுக் கொன்றனர்.
நேற்று மாலை மணி 4.38 வாக்கில், அந்த முதலையைக் கண்ட பொதுமக்கள் தகவல் வழங்கியதாக, லஹாட் டத்து பொது தற்காப்பு படை அதிகாரி டத்தோ கேப்டன் அஹ்மத் ரோஸ்லான் முகமது கமல் தெரிவித்தார்.
எனினும், மிகவும் பெரிய இராட்சத உருவத்தை கொண்டிருந்ததால், அதனை பிடிக்க மும்முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் இரவு மணி 8.50 வாக்கில் அது சுட்டுக் கொல்லப்பட்டது.
இந்நிலையில் அந்த முதலையை கொல்ல தமது தரப்பினர் ஏழு முறை சுட வேண்டியிருந்ததாக, லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரி சில்வெஸ்டர் சைமின் தெரிவித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் உதவியுடன், பொது தற்காப்பு படை வீரர்கள் அதனை கரைக்கு இழுத்து வந்தனர்.
இதற்கு முன், கடந்தாண்டு செப்டம்பரில், 5.3 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பெரிய முதலை லஹாட் டத்துவில் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.